பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, October 17, 2008

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஒரு கூட்டுப் பங்குக் கம்பனி ஆகும். 1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி, இந்தியாவில் பிரித்தானியாவுக்கு வணிக ரீதியான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, முதலாம் எலிசபெத் மகாராணியால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் தனியுரிமையை (monopoly) இக் கம்பனிக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட இது, ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், இலங்கை முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. 1858 ஆம் ஆண்டில் இது ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை ஐக்கிய இராச்சியத்துடன் நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.


ஆரம்பகாலக் கம்பனியின் கொடி. அக்காலத்தில், சென் ஜார்ஜின் சிலுவை பொறித்த இங்கிலாந்தின் கொடி இடது மேல் மூலையில் காணப்படுகின்றது.
1707 இல் பெரிய பிரித்தானியா உருவாக்கப் பட்ட பின்னர் கம்பனிக் கொடி, கண்டன் கொடியில் (canton flag), யூனியன் ஜாக் கொடியைத் தாங்கியதாக அமைந்தது.
1801 க்குப் பின்னர் கம்பனிக் கொடி பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் சேர்ந்து உருவான ஐக்கிய இராச்சியத்தின் கொடியைத் தாங்கியிருந்தது.பொருளடக்கம் [மறை]
1 நாடுகளின் அரசியலில் கம்பனியின் தாக்கம்
2 வரலாறு
2.1 ஆரம்ப காலம்
2.2 ஆரம்பக் கட்டமைப்பு
2.3 இந்தியாவில் காலூன்றியமை
2.4 விரிவாக்கம்
2.5 முழுமையான தனியுரிமைக்கான பாதை
2.5.1 வணிகத் தனியுரிமை
3 இவற்றையும் பார்க்க



நாடுகளின் அரசியலில் கம்பனியின் தாக்கம்
இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இக் கம்பனி, பிரித்தானியப் பேரரசு உருவாவதில் தலைமை வகித்தது எனலாம். 1717 இல், வங்காளத்தில், சுங்க வரிகளைக் கட்டுவதிலிருந்து விலக்களிக்கும் ஆணையொன்றைக் கம்பனி, முகலாயப் பேரரசரடமிருந்து பெற்றுக்கொண்டது. இது, இந்திய வணிகத்தில், கம்பனிக்குத் தெளிவான முன்னுரிமையை வழங்கியது. 1757 இல், பிளாசி போரில், சர். ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றி, கிழக்கிந்தியக் கம்பனியை ஒரு, வணிக மற்றும் இராணுவ வலிமை கொண்டதாக்கியது. 1760 ஆம் ஆண்டளவில், பாண்டிச்சேரி போன்ற ஓரிரு இடங்களைத் தவிர்த்து, இந்தியாவின் ஏனைய இடங்களிலிருந்து பிரெஞ்சுக்காரர் துரத்தப்பட்டனர்.

பெரிய பிரித்தானியாவிலிருந்து, இந்தியாவுக்குச் செல்லும் பாதைகளிலும், கம்பனி ஆர்வம் காட்டியது. 1620 ஆம் ஆண்டிலேயே, தென்னாபிரிக்காவின், டேபிள் மலைப் (Table Mountain) பகுதிக்கு உரிமை கோரியது. பின்னர், சென் ஹெலனாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்தது. கம்பனி, ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகியவற்றையும் நிறுவியது. கடற் கொள்ளைகளைத் தடுப்பதற்கு, கப்டன் கிட் (Captain Kidd) என்பவனை அமர்த்தியது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியிலும் ஈடுபட்டது.


வரலாறு

ஆரம்ப காலம்
இக் கம்பனி, கிழக்கிந்தியாவில் வணிகம் செய்யும், இலண்டன் வணிகர்களின் கம்பனி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. இதனை நிறுவிய சிறந்த முயற்சியாளர்களும், செல்வாக்குக் கொண்டவர்களுமான வணிகர் குழுவினர், 15 ஆண்டுகளுக்கு, கிழக்கிந்தியாவில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனியுரிமையை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டனர். 72,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களைத் தொடக்க மூலதனமாகக் கொண்டிருந்த இக் கம்பனியில் 125 பங்குதாரர்கள் இருந்தனர். தொடக்கத்தில், வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் டச்சுக் காரர்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டைப் பிரித்தானியக் கம்பனியால் அசைக்க இயலாத நிலை. கிழக்கிந்தியாவில் தொடர்ச்சியாக ஒரு தளத்தைக் கூட வைத்திருக்க முடியவில்லை. 1608 ல், கம்பனிக் கப்பல்கள் இந்தியாவின் சூரத்தை அடைந்து அங்கே தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கோரமண்டல் கரை எனப்பட்ட இந்தியாவின் கிழக்குக் கரையில், வங்காள விரிகுடாவை அண்டி அமைந்திருந்த மசிலிப்பட்டினத்தில் புறக்காவல்தளம் (outpost) ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கம்பனி பெருமளவு இலாபம் ஈட்டத் தொடங்கியது. 1609 இல் முதலாவது ஜேம்ஸ் மன்னன், கம்பனிக்கு வழங்கப்பட்ட வணிக உரிமையை கால வரையறையின்றி நீடித்தான். எனினும், கம்பனி தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இலாபம் ஈட்டாவிடில், அந்த உரிமம் செல்லுபடியாகாது என்ற ஒரு விதியும் அவ்வுரிமத்திலே சேர்க்கப்பட்டிருந்தது.


ஆரம்பக் கட்டமைப்பு
கம்பனியின் ஆளுநரும், 24 இயக்குனர்களும் கொண்ட இயக்குனர் சபை அதன் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தது. இவர்களை, உரிமையாளர் சபை நியமனம் செய்தது. இதனால், இயக்குனர்சபை, உரிமையாளர் சபைக்குப் பொறுப்புடையதாக இருந்தது. இயக்குனர் சபையின் கீழ் 10 குழுக்கள் இயங்கி வந்தன.

இந்தியாவில் காலூன்றியமை
இந்துப் பெருங்கடல் பகுதியில் கம்பனி வணிகர்களுக்கும், போத்துக்கீச, ஒல்லாந்த வணிகர்களுக்கும் இடையே பகைமை நிலவி வந்தது. 1612 ல், சுவாலிப் போரில், கம்பனி போத்துக்கீசரைத் தோற்கடித்த நிகழ்வு, முகலாயப் பேரரசரான ஜஹாங்கீரிடம், கம்பனிக்குச் சாதகமான போக்கு ஏற்பட வழி வகுத்தது. தொலைதூரக் கடல்களில் இடம்பெற்ற வணிகம் தொடர்பான போர்களின் பயனற்ற தன்மையை உணர்ந்த கம்பனி, பிரித்தானியா, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் அதிகாரபூர்வமான அனுமதியுடன், இந்தியாவில் காலூன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முற்பட்டது. இது குறித்து முகலாய அரசுக்கு ராஜதந்திர அடிப்படையிலான தூது அனுப்பும்படி பிரித்தானிய அரசைக் கம்பனி கேட்டுக்கொண்டது. 1615 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசனான முதலாம் ஜேம்ஸ், அக்காலத்தில், இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கனிஸ்தானையும் சேர்த்து ஆண்டுவந்த முகலாயப் பேரரசனாகிய ஜஹாங்கீரிடம், சர் தோமஸ் ரோ (Sir Thomas Roe) என்பவரைத் தூது அனுப்பியது. சூரத்திலும், ஏனைய பகுதிகளிலும், கம்பனியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து, நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வணிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதே இத் தூதின் நோக்கமாகும். இதற்குப் பதிலாக ஐரோப்பியச் சந்தைகளிலிருந்து பண்டங்களையும், அருமையாகக் கிடைக்கக்கூடிய வேறு பொருட்களையும், மன்னருக்கு வழங்குவதாகக் கம்பனி ஒத்துக்கொண்டது. இந்தத் தூது வெற்றிகரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வணிகர்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அவர்கள் விரும்பிய, வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துப் பிரித்தானிய மன்னருக்கு, ஜஹாங்கீர் கடிதம் எழுதினார்.


விரிவாக்கம்
இத்தகையதொரு வெளிப்படையான ஆதரவின் கீழ், கோவா, பம்பாய் (இப்பொழுது மும்பாய்) போன்ற இடங்களில் தளங்களைப் பெற்றிருந்த போத்துக்கீசரைக், கம்பனி பின்தள்ளியது. கம்பனி, சூரத், மதராஸ்(இப்பொழுது சென்னை) (1639), பம்பாய் (1668), கல்கத்தா (1690) ஆகிய இடங்களில் தனது வலுவான நிலைகளை அமைத்துக்கொண்டது. 1647 ஆம் ஆண்டளவில், கம்பனிக்கு இந்தியாவில், பக்டறிகள் (factories) எனப்பட்ட புறக்காவல்நிலைகள் 23 ம், 90 ஊழியர்களும் இருந்தனர். இவற்றுள் முக்கியமானவை, வங்காளத்தில் உள்ள வில்லியம் கோட்டை, சென்னையில் உள்ள சென் ஜார்ஜ் கோட்டை, பம்பாய்க் கோட்டை என மதிலால் சூழப்பட்ட கோட்டைகள் ஆயின.

கம்பனியின் முக்கிய வணிகப் பொருள்கள் பருத்தி, பட்டு, நீலச்சாயம் (indigo), பொட்டாசியம் நைத்திரேற்று, தேயிலை என்பனவாகும். மலாக்கா நீரிணைப் பகுதிகளில், வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் ஒல்லாந்தருக்கு இருந்த தனியுரிமையிலும் இவர்கள் தலையிட ஆரம்பித்திருந்தனர். 1711 இல், வெள்ளி உலோகத்துக்காகத் தேயிலையை வாங்குவதற்காகச் சீனாவிலுள்ள காண்டனில் புறக் காவல்நிலை ஒன்றையும் கம்பனி நிறுவியது.

1670 ஆம் ஆண்டளவில், இரண்டாவது சார்ள்ஸ் மன்னர், கம்பனிக்கு மேலும் பல உரிமைகளை வழங்கினார். இது தொடர்பாக ஐந்து தொடர்ச்சியான சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, சுதந்திரமான ஆட்சிப்பகுதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும், நாணங்களை வெளியிடவும், கோட்டைகள், [[படை]கள் முதலியவற்றை வைத்திருக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும், போரில் ஈடுபடவும், சமாதானம் ஏற்படுத்திக்கொள்ளவும், கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில், குடிசார் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவும், கம்பனிக்கு உரிமை வழங்கப்பட்டது. வணிகப் போட்டியாளர்களாலும், பிற வல்லரசுகளாலும், பகைமை கொண்ட சில உள்ளூர் ஆட்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்த கம்பனி தனது பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கு இத்தகைய உரிமைகள் வாய்ப்பாக அமைந்தன. 1680ல், பெஉம்பாலும், அந்நந்த நாடுகளின் உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளைக் கம்பனி உருவாக்கியது. 1689 ஆம் ஆண்டளவில், வலிமை மிக்க படைபலத்துடன், வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களைச், சுதந்திரமாக நிர்வகித்துக்கொண்டு, இந்தியாவில் ஒரு தனி நாடாகவே செயற்பட்டுவந்தது

No comments: