பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, October 3, 2008

உலகளாவிய உணவு நெருக்கடி, காரணம் என்ன?

[K.S.அனோஜி]




இன்றையகாலப்பகுதியில் உலகநாடுகள் பல எதிர்நோக்குகின்ற உணவுப்பொருள் தட்டுப்பாடு, விலையதிகரிப்பு, அவற்றிற்கான காரணங்கள் சம்பந்தமாக இங்கே ஆராயப்படுகின்றன.
உலக அமைதியை பாரதூரமாக அச்சுறுத்தக்கூடிய காரணிகளுள் ஒன்றாக இன்று உணவு காணப்படுகின்றது. உணவுப்பொருட்களின் அதிகரித்த விலைகள் (சிலபொருட்களின் விலைகள் இரண்டு வருடகாலப்பகுதியில் இருமடங்காகியுள்ளன) பல நாடுகளிலும் கலவரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் தோற்றுவித்திருக்கின்றன.
மெக்சிக்கோவிலிருந்து பாக்கிஸ்தான் வரை எதிர்ப்பார்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறியுள்ளன[9]. 2008 ஜனவரியில் மேற்கு ஆபிரிக்க நாடான Burkina Faso இல் மூன்று நகரங்களில் கலவங்கள் ஏற்பட்டு அரச கட்டடங்கள் எரியூட்டப்பட்டன, களஞ்சியங்கள் சூறையாடப்பட்ட்டன. அதே மாதத்தில் கமரூனில் நடந்த வண்டி ஓட்டுனர்களின் எண்ணைவிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம், உணவு விலைகளுக்கு எதிரான மிகப்பெரியதொரு ஆர்ப்பாட்டமாக மாறி 20 பேரின் உயிர்களை காவுகொண்டது.அதே மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் கடந்தவருட இறுதியில் செனகலிலும், Mauritania விலும் வெடித்திருந்தன.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் இந்திய மேற்கு வங்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான உணவு-நிவாராண களஞ்சியங்களை எரியூட்டியிருந்தார்கள். களஞ்சியங்களின் உரிமையாளர்கள் அரச நிவாரணப்பொருட்களை கருப்பு சந்தையில் விற்பதாக அங்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டியிருந்தார்கள்[9]. மொத்தத்தில் உலக அமைதிக்கு பெரியதொரு அச்சுறுத்தலாக இந்த உலகளாவிய உணவுநெருக்கடி மாறியிக்கின்றது.
ஆசியநாடுகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக ஏற்படுத்தப்பட்ட பசுமைப்புரசியின் காரணமாக உணவுநெருக்கடியின் தாக்கம் மிகப்பாரதூரமாக இல்லாவிட்டாலும், ஆபிரிக்காவிலோ நிலைமை மிக மோசமடைந்துவிட்டது. அங்கே மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியிருக்கின்றது. கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள், அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப்பொருட்களின் விலைகள் ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. உலகிலுள்ள மிக வறிய மக்களில் ஏறக்குறைய 100 மில்லியன் மக்கள் இப்போது, உணவிற்காக செலவளிக்க முடியாத நிலையிலுள்ளார்கள் என ஐ.நா சபை அண்மையில் கணிப்பிட்டுள்ளது. இலங்கையில், உணவுப்பொருட்களின் விலைகள் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளன. சாதாரண, வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு, எகிறிச்செல்லும் உணவுபொருடகளின் விலைகள் பெரும் பிரச்சினைகளாக மாறியுள்ளன. அரசியல், இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளுடன், இந்த உலகளாவிய உணவுத்தட்டுப்பாடும், உணவுப்பொருட்களின் விலைகளை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. கீழே உலகளாவிய இன்றைய உணவுத்தட்டுப்பாட்டுக்கு காரணமான ஐந்து விடயங்கள் ஆராயப்படுகின்றன, 1. உயிரியல் எரிபொருள் (Bio Fuels) உற்பத்தி இன்று வளர்ச்சியடைந்துவரும் நாடுகளால், உலக உணவுத்தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணியாக, வளர்ச்சியடைந்த நாடுகளால் அவர்களது எரிபொருள் தேவைகளை நிறைவுசெய்ய, மேற்கொள்ளப்படும் உயிரியல் எரிபொருள் (எதனோல்) உற்பத்தியே சுட்டிக்கட்டப்படுகின்றது. உணவாகப்பவிக்கப்படும் தானியங்கள் இதற்காக பெருமளவில் பாவிக்கப்படுவது உலகளாவிய உணவுப்பொருட்களின் விலையதிகரிப்புக்கு முக்கிய காரணியாகின்றது. உண்பதற்கான உணவுற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு உற்பத்தி நிலங்கள் பலவும் இப்போது இந்த உயிரியல் எரிபொருள் உற்பத்திக்கான தானியங்களை விளைவிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. 2. சனத்தொகைப்பெருக்கம் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் 9 பில்லியனை தாண்டவிருக்கும் உலகசனத்தொகைப்பெருக்கம் உலக உணவுத்தட்டுப்பாட்டுக்கு இன்னொரு முக்கிய காரணியாகும். என்றுமில்லாதவாறு அதிகளவான வயிறுகளுக்கு உணவளிக்கவேண்டிய அதேநேரம், அதிகரித்துள்ள சனத்தொகையால் நீர், நிலம், எண்ணெய் என்பவற்றின் பாவனையும் அதிகரித்துள்ளது. முக்கியமாக பயிர்ச்செய்கைக்கான நிலப்பவனை குறைவடைவதில் அதிகரித்துவரும் சனத்தொகை செல்வாக்குசெலுத்துகின்றது. அதிகரித்த சனத்தொகையால் இன்று நாடுகள்பல பாலைவனங்களாக (காடழிப்பு) மாறிக்கொண்டிருகின்றன. 3. எதிர்பாராத காலநிலை மாற்றங்கள் உலகின் முக்கிய உணவுப்பொருள் உற்பத்திசெய்யும் நாடுகளில் கடந்தகாலங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதகமான காலநிலை மாற்றங்கள் (வரட்சி, சூறாவளி, வெள்ளம், மாறுபட்ட மழைவீழ்ச்சி) உலக சனத்தொகைக்கான உணவுவழங்கலை பெருமளவு பாதித்துள்ளது. அதிகரித்துள்ள உலக சனத்தொகை, சுற்றுச்சூழல் மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. அதன்விளைவான சூழல் மாசடைதல், எதிர்பாராத காலநிலை மாற்றங்களுக்கு வழிகோலுகின்றது. அவ்வாறே புவி வெப்பமடைதல் உணவுற்பத்தியை பெருமலவில் பாதிக்கின்றது. 4. அதிகரித்துவரும் மத்தியதர வர்க்கம் முக்கியமாக இந்தியா, சீனா போன்ற சனத்தொகை அதிகமுள்ள நாடுகளில், அதிகரித்துவரும் மத்தியதரவர்க்கத்தை சேர்ந்தவர்களால், உணவுப்பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. அவர்கள் இப்போது அதிக உணவினை உட்கொள்ளுகின்றார்கள். இந்தியாவில் 350 மில்லியன் மக்கள் நடுத்தர வர்க்கத்தினராக உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். அந்த மக்களுக்கு வளம் அதிகரிக்கும்போது அவர்களின் வாங்கும் சக்தியும், சத்தான உணவுகளை நாடிச் செல்வதும் அதிகரிக்கிறது. அது உலக அளவில் விலையேற்றத்துக்கு வழி வகுக்கிறது உலகத்தில் ஒட்டுமொத்தமாக அதிகரித்துவரும் எண்ணிக்கையிலான பணக்காரர்களினால் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், ஏறக்குறைய 100 மில்லியன் அளவிலான வறியவர்கள் உணவுப்பொருட்களை வாங்கமுடியாதவர்களாகின்றார்கள். 5. நாடுகளின் அரசியல் ஸ்திரமற்ற தன்மை பல்வேறு உணவுற்பத்த்திசெய்யும் நாடுகளினதும் அரசியல், பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை உலக உணவுற்பத்தியில் பெரும் பாதிப்பை உண்டுபண்ணுகின்றது. மேற்குநாடுகளின் உலகமயமாதல் என்றபோர்வையில், உணவுற்பத்திசெய்யும் நாடுகளில் உணவுற்பத்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துசெல்கின்றது. புதிய, புதிய மத்தியதர வர்க்கத்துக்கான தொழில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

No comments: