பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Thursday, October 9, 2008

அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏழைகளுக்கு பட்டினிச்சாவு

[K.S.அனோஜி]
அமெரிக்க ஐக்கிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ள மெக்சிக்கோ நாட்டு மக்களின் அன்றாட உணவான மக்காச் சோளம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அசாதாரணமான அளவிற்கு உயர்ந்ததையடுத்து, அந்நாட்டில் கடந்த ஆண்டு உணவுக் கலகம் ஏற்பட்டது. பட்டினிகிடக்க மறுத்து, அந்நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்கள் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தனிச் சட்டம் போடவேண்டிய நிலைக்கு, மெக்சிக்கோ அரசைத் தள்ளியது. மெக்சிக்கோவுக்கு அருகில் அமைந்ததுள்ள பிரேசில், குவாதிமாலா நாடுகளிலும் கூட இதே நிலை தான் . குவாதிமாலாவில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மக்காச் சோளத்தின் விலை 37% அதிகரித்ததால், அந்நாட்டு ஏழைகள் அரை பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆபிரிக்கா கண்டத்திலுள்ள சுவாசிலாந்து நாட்டு மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் ""கசாவா' என்றொரு கிழங்கு வகைக் கிடைப்பதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏறத்தாழ 40 சதவீத மக்கள் முழுபட்னி கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்களின் விலையேற்றமும், தட்டுப்பாடும் ஏமன் பர்கினோ ஃபாசோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உணவுக்கலகங்கள் ஏற்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளன. ஆர்ஜன்டீனா நாட்டில் இறைச்சியை விடத் தக்காளியின் விலை அதிகமாகப் போனதால், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அந்நாட்டு மக்கள் தக்காளியைப் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். இத்தாலியின் உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, பஸ்தா என்ற உணவுப் பொருளை ஒருநாள் மட்டும் புறக்கணிக்கும் போராட்டம் நடந்திருக்கிறது. பால்,ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்து ஆண்டு சனவரி 31 ஆந் திகதி வரை உயர்த்தக் கூடாது என ரஷ்யாவில் அரசாங்கத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடந்த ஒர் ஆண்டுக்குள் மக்காச் சோளத்தின் விலை 50 சதவீதமும் ; அரிசியின் விலை 20 சதவீதமும்; கோதுமையின் விலை இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஐ.நா.மன்றம் ""உலகளவில் தானியக் கையிருப்பு 57 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்றதொரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டதில்லை ' என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் உலகில் ஏழை மக்கள் பட்டினியை நோக்கித் தள்ளப்படுகின்றனர். இதற்கான ஆரம்பக் கட்ட அறிகுறிகள் ஐமேக்கா, நோபளம், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள துணை சகாரா நாடுகளில் தென்படுவதாக கூறப்படுகிறது. எனினும் பங்குச் சந்தை வீழ்ச்சியின் துயரம் விவாதிக்கப்படும் அளவிற்கு உலக அளவில் எழுந்துவரும் உணவுப் பொருள் தட்டுப்பாடும், அவற்றின் விலையேற்றமும் விவாதிக்கப்படுவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் விலை விஷம் போல ஏறி வருவதற்கும் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் வெள்ளம் / வறட்சி போன்ற நொண்டிச் சாட்டுகளைக் கூறி ஆளும் கும்பல் தப்பிவிட முடியாது. மாறாக ""உயிரி எரிபொருள்' (Bio -Fuel) என்ற ஏகாதிபத்திய நாடுகளின் திட்டத்தைத்தான் குற்றாவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும் . உயிரி எரிபொருள் தயாரிப்புக்காக மக்காச்சோளம், சோயா, கரும்பு, சில வகையான கிழங்குகள், எண்ணெய் வித்துகள் போன்ற விவசாய விளை பொருட்கள் திருப்பிவிடப்பட்டதால் தான் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணெய்,நிலக்கரி போன்ற மரபு சார்ந்த எரிபொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு அதனிடத்தில் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என ஏகாதிபத்திய நாடுகள் உபதேசிக்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலம், சுற்றுப்புறச் சூழல் மாசு அடைவதைக் தடுக்கலாம் புவியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போவதை தடுக்கலாம். கச்சா எண்ணெய் இறக்குமதி அதனின் விலை உயர்வு ஆகியவற்றால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம் ' என உயிரி எரிபொருள் பயன்பாடுக் காரணங்கள் அடுக்கப்பட்டு உயிரி எரிபொருளுக்கு ஆதரவாக உலகெங்கும் தீவிரமாகப் பிரசாரம் நடந்து வருகிறது. ஏழை நாடுகளை விட, அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளான 2010 ஆண்டுக்குள் 5.75 சதவீதமும் 2005 க்குள் 8 சவீதமும் உயிரி எரிபொருளைப் பயன்படுத்தவேண்டும்' என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ""இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் அமெரிக்காவில் பயன்படும் எரிபொருளில் 30 சதவீதம் உயிரி எரிபொருளாக இருக்க வேண்டும் ' என அந்த நாட்டு அதிபர் ஜோர்ஜ் புஷ் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் தேவைப்படும் இந்த உயிரி எரிபொருளைத் தாயாரித்துக் கொடுக்கும் சமூகப் பொருளாதாரக் "" கடமை ' ஏழை நாடுகளின் மீது சுமத்தப்பட்டு அதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. உயிரிஎரிபொருளான எத்தனால் தயாரிப்பில் ஒரு சதவீதமாக உள்ள மத்திய அமெரிக்க நாடுகளின் பங்கை 2020 ஆண்டுக்குள் 5 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ள ""ஐ.டி.பி.' என்ற அமெரிக்க வங்கி இதற்காக எட்டு இலசம் கோடி ரூபா மூலதனமிடப் போவதாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் உயிரி எரிபொருள் தயாரிப்புக்கும் விற்பனைக்கும் இறக்குமதி வரி விலக்கு உள்ளிட்டுப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன . அமெரிக்காவின் தேசங் கடந்த தொழில் கழகமான கார்கில் ,பிரேசில், எல்சல்வடோர் ஆகிய நாடுகளுடன் இணைந்து உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவும் ஒப்பந்தங்களை போட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சோர்ந்த டி 1 ஒயில் நிறுவனம் ஜமேக்கா நாட்டில் ஒப்பந்த விவசாய அடிப்படையில் காட்டாமணக்குப் பயிரிடுவதை 4,000 ஹெக்டயர் பரப்பளவில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 1,74.000 ஹெக்டயர் பரப்பளவிற்கு விரிவாக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவில் 1.4 கோடி ஹெக்டயர் பரப்பளவில் காட்டமணக்கு பயிரிடும் திட்டமொன்றை இந்திய அரசு தீட்டி வருவதாகக் கூறப்படுகிறது. மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் ""பாமாயில் ' உற்பத்திக்காக விளைவிக்கப்படும் கூந்தல் பனை விளைச்சலில் 40 சதவீத்தை உயிரி எரிபொருள் உற்பத்திக்காக ஒதுக்கப்போவதாகவும் பிரேசில் நாட்டில் விளையும் கரும்பில் 50 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க ஒதுக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி கோதுமை சோயா ஆகிய உணவு தானியங்களிலிருந்தும் வணிக ரீதியாக உயிரி எரிபொருள் தயாரிக்க முடியமா ? என்பது குறித்த ஆராய்ச்சிகளுக்கும் முடுக்கி விடப்பட்டுள்ளன. உயிரி எரிபொருள் மாசற்ற சுத்தமான எரிபொருள் (Clean Energy) தானா? இதனை எரிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு அடையுமா, அடையாதா என்பதெல்லாம் அறிவியல் பூர்வமாக விவாதித்துத் தீர்க்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. எனினும் ஏகாதிபத்தியங்களால் முன்தள்ளப்பட்டும் இந்தத் திட்டம் ஏழை நாடுகளின் விவசாயத்தின் மீது ஏழைமக்கள் மீதும் பாரதூரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இப்பொழுது ஆதாரங்கள் கிடைத்துள்ளன. "" ஒரு காரின் டாங்கியை நிரப்பும் அளவிற்கு உயிரி எரிபொருளைத் தயாரிக்கத் தேவைப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு ஒரு ஏழையின் ஓராண்டு உணவுத் தேவையை நிறைவு செய்து விட முடியும். ' எனக் கூறப்படுகிறது. அதனால் தான் இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் இலத்தீன் அமெரிக்க மக்கள் "" அமெரிக்காவில் கார்கள் ஓடுவதற்கு நாங்கள் பட்டினி கிடக்க வேண்டுமா ? என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு விளைந்த மொத்த மக்காச் சோள விளைச்சலின் சதவீதம் ( 1.4 கோடி தொன் ) உயிரி எரிபொருளான எத்தனால் தயாரிப்புக்குத் திருப்பிவிடப்பட்டதன் விளைவாக, அந்நாட்டில் மக்காச் சோளத்தின் விளைச்சலின் விலை கடந்த ஓராண்டுக்குள் 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஜரோப்பிய யூனியன் நாடுகளில் விளையும் ஒருவித கடுகு எண்ணெய் வித்து, உயிரிஎரிபொருள் தயாரிப்புக்கு பயன்படுவதால் அதன் விலை 2005 ஆம் ஆண்டில் 75 சதவீதம் அதிகரித்தது. ஆபிரிக்க நாடான சுவாசிலாந்தில் விளையும் உணவுப் பொருளான கசா வா கிழங்கு உயரி எரிபொருள் தயாரிப்புக்காக ஏற்றுமதி செய்யப்பட்டதால் தான் அந்நாட்டை சேர்ந்த 40 சதவீத மக்கள் பட்டினி கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டனர். தற்பொழுது கிடைக்கும் அதிகார பூர்வ புள்ளி விவரத்தின்படி உலகில் ஏறத்தாழ 85 கோடி மக்கள் அரைப் பட்டினியோடு தான் காலத்தை ஓட்டுகின்றனர். உயிரி எரிபொருள் தயாரிப்புக்காக உணவுப் பொருட்கள் திருப்பி விடப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்லும் பொழுது, உணவுப் பொருட்களின் விலை மட்டும் உயராது இந்தப் பட்டினிப் பட்டாளத்தின் எண்ணிக்கையும் தற்பொழுது உள்ளதை விடப் பல மடங்காக அதிகரித்துவிடும் . உணவுப் பொருளை உலகில் ஓடும் 80 கோடி கார்களின் எரிபொருள் தேவைக்குப் பயன்படுத்துவதா ? அல்லது உலகில் வாழும் 200 கோடி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்துவதா ? என்ற கேள்வியில் இருந்து தான் உயிரி எரிபொருள் திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும். உலகின் எரிபொருள் தேவையை ஈடுகட்டவும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும் புவி வெப்பம் உயர்வதைத் தடுக்கவும் அறிவியல் பூர்வமான வேறு வழிகள் இருக்கும் பொழுது ஏழை மக்களைப் பட்டினிக்குள் தள்ளிவிட்டு தான் இதனைச் சாதிக்கமுடியும் என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான வக்கிர திட்டமாகவே இருக்க முடியும். பெற்றோல், டீசல் , நிலக்கரி போன்ற மரபு சார்ந்த எரிபொருளுக்கும் முற்றிலும் மாற்றீடாக உயிரி எரிபொருள் அமைந்து விட முடியாது.""இந்தப் புவியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களிலும் வீரிய மகசூலைத் தரும் உயிரி எரிபொருள் தாவரங்களைப் பயிரிட்டால் கூட அது உலகின் கச்சா எண்ணெய் தேவையில் வெறும் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்' என்பதை உயிரி எரிபொருள் ஆதாரவாளர்கள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.

No comments: